"காங்கிரஸ் கட்சியில் இனி வாரிசு அரசியல் மற்றும் பணபலத்துத்துக்கு இடமில்லை. உழைப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும்' என்று இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் மகேந்திரன் தெரிவித்தார்.
இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த மகேந்திரன், ஜோதிமணி இருவரும் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.
இருவரும் தமிழகத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மாநிலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
அகில இந்திய செயலராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்னை வந்த மகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு புதன்கிழமை வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த ஜூலை 14-ம் தேதி தமிழகத்திலிருந்து மாநிலப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல் காந்தி தில்லிக்கு அழைத்திருந்தார்.
அங்கு அவர் நேர்காணல் நடத்தி சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த என்னை இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலராக நியமனம் செய்துள்ளார்.
இதன் மூலம் காங்கிரஸில் வாரிசு அரசியல் மற்றும் பணபலத்துக்கு இடமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மட்டுமே இனி காங்கிரஸில் முக்கியத்துவம் கிடைக்கும். எனக்கு கிடைத்துள்ள இந்தப் பொறுப்பு தமிழகத்தில் உள்ள 12.5 லட்சம் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கிடைத்த கௌரவமாகும் என்றார்
நன்றி : தினமணி : 12.08.2010